Thursday, May 17, 2012

இலும்பையங்கோட்டூர்

யோக தக்ஷிணாமூர்த்தி

”தம்பிக்குதான் இதுமாதிரி இடமெல்லாம் கிடைக்கும்” என்று நடுங்கிய என் சித்தியின் பயத்தில் நியாயம் இருந்தது.

சுற்றிலும் மை பூசின கும்மிருட்டு. எங்கோ தொலைந்து போன நிலா. எந்நேரமும் மழை பொழியலாம் என்று உறுமும் வானம். வழியோரத்தில் புதர் புதராக கருவேலம் முள் காடு. முன்னால் செல்லும் எங்கள் வாகனத்தின் ஒளியைத் தவிர வெளிச்சமே இல்லை. தொடுவானத்தில் எங்கேயோ மெயின் ரோட்டில் போகும் பஸ்ஸின் ஒளித்தீற்றல்கள். கண்ணாடி வழியாக உற்றுப் பார்த்தால் தூரத்தில் உருவங்கள் நிற்பது போன்ற பிரமையேற்படுத்தும் செடி கொடிகள். எட்டு மணியைத் தாண்டி காட்டிய பச்சையில் ஒளிரும் ரேடியம் வைத்த கைக்கடிகாரம் ”நேரமாகிவிட்டது” என்று எச்சரித்தது.

அந்த கிராமத்திற்கு போகும் உட்சாலையிலிருந்து ஒரு ஒற்றை விளக்கு எங்களது குவாலிஸ்ஸை விடாமல் பின் தொடர்கிறது. கண்ணுக்கெட்டிய தூரம் வரை முன்னாலும் பின்னாலும் வேறு நடமாட்டமே கிடையாது. நாங்கள் ஆக்ஸிலேட்டரிலிருந்து காலெடுத்தால் அதுவும் நிற்கிறது. நாங்கள் விரட்டினால் அதுவும் விரட்டுகிறது.

“தம்பி! பயமா இருக்குடா” என்றார்கள்.

“ஸ்வாமி பார்க்க போறோம். ஓன்னும் ஆகாது” என்று உதடுகள் தைரியம் சொல்ல உள்ளம் கொஞ்சம் நடுங்கத்தான் செய்தது. இருந்தாலும் அந்தப் பரமனை நினைத்துக்கொண்டு நெஞ்சுரத்தோடு முன்னேறினோம்.

கிராமத்தின் பிரதான வீதியை அடைந்ததும் ஆங்காங்கே ஒன்றிரண்டு தெருவிளக்குகள் மங்கலாக எரிந்தன. பின்னால் வந்த எம்.80 சரேலென எங்களை முந்திச் சென்றது. பின்னால் திரும்பியதில் அதன் பற்கள் தெரிந்தது. நட்பாகச் சிரித்தார். அப்புறம்தான் இருட்டில் பாதுகாப்பாக எங்கள் பின்னால் வந்தார் என்று புரிந்தது. அவரிடமே கோயிலுக்கு வழிகேட்டோம்.

“ரைட்ல போங்க.. இந்நேரம் திறந்திருப்பாங்களா தெரியலையே” என்றார்.

நான், என்னுடன் வயதான இரண்டு சித்திகள், குழந்தைகள் மனைவி என்று ஏழெட்டுப் பேர் ஒரு சனிக்கிழமை திருத்தல யாத்திரையாக சென்னைக்குப் பக்கத்தில் தொண்டை நாட்டுத் தலமான இலும்பையங்கோட்டூருக்கு விஜயம் செய்தோம். படாளம் கூட் ரோடிலிருந்து கிளைச்சாலையில் பிரிய வேண்டும். எலுமியன்கோட்டூர் என்று மக்கள் வழக்கில் இருக்கும் கிராமம் அது.

அந்த ஓரத்திலிருந்து கசிந்த வெளிச்சத்தைப் பார்க்கையில் கோயில் திறந்திருந்தது போலத்தான் இருந்தது. பக்கத்தில் வந்தும் கதவடைத்துவிடப்போகிறார்கள் என்று பதைத்தேன். நல்லவேளை திறந்திருந்தது. நாலைந்து அந்தணச் சிறுவர்கள் பட்டை பட்டையாய் திருநீறணிந்து உள்ளே உலவிக்கொண்டிருந்தார்கள்.

ஒரு ஜான் அளவிற்கு குடுமி வைத்த சிறுவன் ஒருவன் நாலு முழத்தை எட்டு முழம் போல இடுப்பில் சுற்றிக்கொண்டு அதற்கு மேலே சிகப்புக் காசித்துண்டு கட்டி ருத்ராட்ச கழுத்தோடு அழகன் முருகன் போல நின்றான்.

“நடை சார்த்திருக்குமோன்னு பயந்துட்டேன்” என்றேன்.

“இனிமே தான் அர்த்த ஜாமம் ஆகப்போறது” என்ற அந்தப் பையனை உற்றுப்பார்த்தேன். நல்ல தேஜஸாக இருந்தான்.

”நீங்கெல்லாம் யாரு“ என்றேன்.

“பக்கத்தில வேத பாடசாலை இருக்கு. அங்க வேதம் கத்துக்கறோம்” என்று அவன் சொல்லும்போதே உச்சரிப்பில் வேதம் வழிந்தது.

“அர்ச்சனை இருக்கா?” என்று கேட்டேன்.

“இல்ல. தீபாராதனை போதும்” என்றேன்.

குறைந்த வெளிச்சத்தில் கணீரென்று ஸ்ரீருத்ரம் சொல்லி அந்தப் பையன் காட்டிய தீபாராதனையில் சிவபெருமான் நேரே வந்து காட்சிகொடுத்தது போலிருந்தது. கற்பூர ஆரத்தியில் ஈஸ்வரன் ஜொலித்தார்.

சிவ வழிபாடு முடிந்து திருவலம் வருகையில் கோஷ்டத்தில் சின் முத்திரையுடன் இருக்கும் யோக தக்ஷிணாமூர்த்தியின் எழில் காணக் கண்கோடி வேண்டும்.

இரம்பை பூஜித்த தலம் அரம்பையங்கோட்டூர். திருஞானசம்பந்தர் பாடல் பெற்ற தலம். அரம்பேஸ்வரர் கனக குஜாம்பிகையுடன் அருள் புரிந்து வருகிறார். மூலவர் தீண்டாத் திருமேனி. வெளிர் செம்மண் நிற சிவலிங்கத் திருமேனி. பெரிய ஆவுடையார். யாருமே மூலவரைத் தொட்டு பூசை செய்வதில்லை. நல்ல பெரிய மூர்த்தம். அம்பாள் சந்நிதியில் மஹா பெரியவாள் சக்கரப் பிரதிஷ்டை செய்து ஒரு மண்டலம் தங்கியிருந்து வழிபட்டிருக்கிறார்.

குருர் ப்ரம்மா குருர் விஷ்ணு: குருர் தேவோ மஹேச்வர: | குரு: சாக்ஷாத் பரம்ப்ரம்மா தஸ்மை ஸ்ரீ குரவே நம

நிறைவான தரிசனம். வரும்போதும் ஒரு இருசக்கரம் பின் தொடர்ந்தது. ஆனால் இப்போது பயமில்லை!

Wednesday, May 16, 2012

வைகல்


”வைகல் இன்னும் எவ்வளவு தூரம்?”

திருநீலக்குடி தாண்டி புளிய மர நிழலில் தள்ளுவண்டியில் சாத்துக்குடி ஜுஸ் கடை போட்டிருந்தவரிடம் கேட்டபோது ஹிஸ் அடித்தக் கீச்சுக் குரலில் “நேரா மேக்கால போங்க.. ஒரு பாலம் வரும்.. அதில தெக்கால கொஞ்ச தூரம் போனா வைகல் வரும்” என்றார். ”ஸ்ட்ரெயிட்டா போய் ஃபர்ஸ்ட் ரைட் அப்புறம் செகண்ட் லெஃப்ட்” என்று இதுகாரம் வழியறிந்த என் வாரிசுகள் ”தெக்கால மேக்கால” என்று திசையில் வழிகேட்டு திக்குமுக்காடிப்போனார்கள்.

அவர் சொன்ன மேற்கால போய்க்கொண்டே இருந்ததில் வலதில் ஒரு பழையப் பாலம் வந்தது. பாலத்துக்குப் பக்கத்தில் தென்னக கிராமங்களில் ஒட்டிப் பிறந்த ஒரு டீக்கடையும் இருந்தது. கொடிமரங்கள் நிறைந்த அந்தப் பகுதிதான் ஒரு பேருந்து நிறுத்தமாகவும் செயல்பட்டு வந்தது. அங்கே டவுனுக்குப் போக கையில் பாலிதீன் பேக்குடன் காத்திருந்த ஒரு சிகப்புக் கண்ணாடி வளையல் அம்மாளிடம் “வைகல் இப்படிப் போலாங்ளா?” என்று கேட்டதற்கு

“இப்டியே நேரா நாட்டார் வாய்க்கால் தாண்டி போனீங்கன்னா ஒரு கிலோ மீட்டர்ல வரும்” என்று சொல்லிவிட்டு ஜன்னல் எட்டிப் பார்த்த என் இளையவளைப் பார்த்து கடைவாய்ப் பல் தெரிய சிரித்தாள் அந்தம்மா. கன்னம் சிவக்கும் வெட்கத்தில் தலையை உள்ளுக்கு இழுத்துக்கொண்டாள் என் பெண்.

அவர் கைகாட்டிய திக்கில் ஒரு சிங்கில் பெட் ரோடு. சரசரவெனப் பிடித்தால் இரண்டு கி.மீட்டரில் சாகுபடி முடிந்த வயற்வெளிகளுக்கிடையில் மேய்ந்துகொண்டிருந்த மாடுகளுக்கிடையில் ஏதோ ஒரு குக்கிராமம் போலவும் நடுவே ஒரு சில தலைகளும் தெரிந்தன. துள்ளிக் குதித்த தாய் ஆடு தனது குட்டிகளுடன் நுழைந்த முள்வேலியில் பார்டர் போட்ட வீட்டைக் கடந்தவுடன் அந்தக் கிராமத்தில் மொத்தமாகவே இரண்டு தெருக்கள் இருந்தது. அதிக பட்சமாக புழுதி பறக்க நாங்கள் பயணித்து வந்த அந்த செம்மண் “மெயின்” ரோட்டையும் சேர்த்து மூன்று ராஜ வீதிகள். ஊருக்குள் நுழையும் இடத்தில் ஓரமாக அரசாங்க செலவில் ஒரு அடிபைப் போட்டிருந்தார்கள். தேகம் துருப் பிடித்திருந்த அந்த இரும்புப் பைப்பின் கைப்பிடி பளபளவென்று இருந்ததில் அவ்வூரில் இருந்த பத்து குடும்பத்திற்கு வாரி வாரி தண்ணீர் தரும் பைப் என்று தெரிந்தது.

வைகல் ஒன்றும் பெரிய கோவில் இல்லை. ராஜகோபுரம் கிடையாது. பெரிய மதிற் சுவர்கள் கிடையாது. மூலவர் சுயம்பு. ஒரு காலத்தில் செண்பகாரண்யமாக இருந்த இடம். கோச்செங்கட் சோழன் கட்டிய யானை ஏறாக் கோயிலெனப்படும் மாடக்கோயில் வகையறாவில் ஒன்று.

”குருக்கள் வருவாருங்களா?” பக்கத்து குட்டையிலிருந்து ப்ளாஸ்டிக் குடம் ஏந்தி குனிந்து வந்த பெண்மணியிடம் கேட்டேன்.

“தோ வாரேன்!” என்று பக்கத்தில் உதயசூரியன் போட்ட சிமெண்ட் ஜன்னல் வீட்டிலிருந்து கோயில் சாவி எடுத்து வந்தார். டிராயரை அரணாக் கயிரில் சொருகிய சட்டையில்லாத ஒரு பையன் எட்டிப் பார்த்தான்.

“மெய்க்காவல்...” என்று இழுத்த என்னிடம் “நாங்கதான்” என்றார்.

”ஆடுதுறையிலிருந்து தான் வரணும். தெனமும் ஒரு வேளை பூசைக்குதான் ஐயிரு வருவாரு” என்று குறைப்படும் தொனியில் பேசினார் அந்த அம்மணி.

கதவைத் திறந்துவிட்டு சந்நிதி வரை கூட வந்தார். தீபாரதனைத் தட்டை கொடுத்து “நீங்களே காமிங்க”. என்னுடைய மயில்கண் வேஷ்டியும் நெற்றியில் பட்டையாய் தரித்திருந்த விபூதியும் நான் அதற்கு தகுதியான ஆள் தான் என்று அவருக்கு தோன்றியிருக்கக்கூடும். நான் பாக்கியம் பெற்றவனானேன். சுயம்பு லிங்க மூர்த்திகளை சேவிப்பதற்கே புண்ணியம் செய்திருக்கவேண்டும் என்பார்கள். தீபாராதனை காண்பிப்பது என்றால் எவ்வளவு பெரிய பேறு!

”நமஸ்தே அஸ்து பகவன்” என்று ருத்ரத்திலிருந்து ஒரு ஸ்லோகம் செய்து வழிபட்டு “தென்னாடுடைய சிவனே போற்றி.. எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி”யுடன் ஒரு ஆரத்தி எடுத்து மகிழ்ந்தேன்.

கையில் கொண்டு போயிருந்த தேவாரத் திருத்தலங்கள் புத்தகத்திலிருந்து கீழ்கண்ட தேவாரப்பாடல் படித்தது ஞாபகத்திற்கு வந்தது.
துளமதி யுடைமறி தோன்று கையினர்
இளமதி யணிசடை யெந்தை யாரிடம்
உளமதி யுடையவர் வைக லோங்கிய
வளமதி தடவிய மாடக் கோயிலே


துள்ளும் மானை கரத்தில் ஏந்தியவனும், பிறைச் சந்திரனை சடையிலணிந்தவனுமான என் தந்தை சிவபிரானை வணங்கும் மதி நிறைந்தவர்கள் தொழும் வைகல் கோயிலானது வானத்தில் வளரும் நிலவை தொடும் மாடக்கோயிலே என்று சம்பந்தர் பாடியிருக்கிறார்.

துளமதி, இளமதி, உளமதி, வளமதியை மதிநுட்பத்தோடு எழுதியிருக்கும் ஞானப்பால் குடித்த சம்பந்தன் நமக்களித்த தமிழ்ப்பால் அந்த தேவாரப்பாடல்.

மதி நிறைந்தவர்கள் தொழும் வைகலை இக் குறைமதியோனும் தொழுதேன்!

#தீர்த்தயாத்திரைக் கதைகள் வளரும்...

Monday, May 14, 2012

ஹாரனீயம்

சனிக்கிழமை சத்தியத்தில் கருத்துக் களேபரங்கள் முடிந்து காலையில் பின் வீல் பஞ்சரான அதே ஐராவத இன்டிகா, அதே பதினாறு வயது மீசை முளைக்காத ட்ரைவர், அதே லொடலொடா மற்றும் க்ரீச் க்ரீச் சத்தத்துடன் ஆஃபீஸ் திரும்பினேன். நிகழ்த்திய உபன்யாசத்திற்கு ஒரு தேங்காய் மூடியாவது கிடைக்கும் என்று எதிர்பார்த்த என் எண்ணத்தில் மண். ”தேங்க்யூ சார்” என்று புன்னகையுடன் வாயார வாழ்த்தி வழியனுப்பிவைத்தார்கள்.

சென்னைப் பட்டிணத்தின் விசேஷ வாசனைகள் உட்புகா வண்ணம் நாற்புறமும் கண்ணாடி உசர்த்திக் காரோட்டிய நான் அன்று பொது வாகனத்தில் வீடு வந்தேன். டீ காஃபி குடித்துவிட்டு ஃப்ரெஷ்ஷாக ட்ரைவர் கண்டக்டர் ஏறும் பஸ் நிலையம் அருகில் என்னுடைய காரியாலயம் இருப்பதால் சிரமபரிகாரமாக உட்கார்ந்து வருவதற்கு நூறு சதவீதம் வாய்ப்பிருந்தது.  



சாலையில் சென்ற பேருந்துகள் புழுதியைக் கிளப்ப அஸ்வங்கள் ஓடிய குருக்ஷேத்திரம் போல பஸ்நிலையம் போர்க்களமாகக் காட்சியளித்தது. என்னுடைய தடத்தில் செல்லும் பேருந்து நிழலாகக் கண்ணில்பட்டது. இளந்தாடி ஓட்டுனர் ஹாரனைத் தடவிப் பார்த்துக்கொண்டு தீவிர யோசனையில் அமர்ந்திருந்தார். வண்டி ஹைட்லிங்கில் டீசலைக் குடித்துக்கொண்டு ஆடிக்கொண்டிருந்தது. பரவலாக பல சீட்கள் அழுக்காக காலியாய் இருந்தன. கமலஹாசன்களுக்கு அமலாக்களுடன் வலையோசை கலகலவென பாடமுடியாதபடி கூட்டமில்லாத பஸ். ஜீன்ஸும் கலைந்த கேசமுமாய் இரண்டிரண்டாக இரண்டு சீட்களில் பொங்கும் இளைமையுடன் நால்வர் உட்கார்ந்திருந்தார்கள். கூடவே “ஏய்.....” “டேய்....” “ஹெஹ்ஹே...” என்று கேலியும் கிண்டலும் பஸ்ஸை உலுக்கியது. எதிர் வரிசையில் மெத்து மெத்து சீட்கள் பூவையருக்காக காத்திருந்தது.

துள்ளிப் பேருந்தில் ஏறிய கண்டக்டருக்கு ரஜினி இன்ஸ்பிரேஷனாக இருக்கக்கூடும். ”போலா ரை” என்று இருவார்த்தையையும் “ம்””ட்”டில்லாமல் ஸ்டைலாகப் பேசி வண்டியைக் கிளப்பினார். நான்கு முறை சக்கரம் சுற்றுவதற்குள் என்னிடம் வந்த கரகர "டிக்கெட்..டிக்கெட்”டிற்கு ”பொன்னியம்மன் கோயில் ஒன்னு” என்றேன். பத்தொன்பது ரூபாய்க்கு கிழித்துக் கொடுத்தார். பல வருடங்களுக்குப் பிறகு பஸ் பிரயாணம். பரீட்சைக்குப் படிப்பது போல ஆர்வமாய் டிக்கெட்டைப் படித்தேன். மேலே ஒரு ஆல்ஃபா ந்யூமரிக் சீரியல் நம்பர். வலமும் இடமும் “மே” “கீ” என்று தோரணமாய் கட்டம்கட்டி ஸ்டேஜ் நம்பர்கள் நடுவில் தடிமனான எழுத்தில் 19-00 என்று அச்சடித்திருந்தது. அதற்கு மேலே சக்கரத்தில் ”மாநகர போக்குவரத்துக் கழகம், சென்னை” என்று லோகோ. கீழே மாற்றத்தக்கதல்ல, பரிசோதனைக்கு உட்பட்டது போன்ற அரசாங்க விதிமுறைகள்.

“டே! அந்தப் பொண்ணு தெலுங்கு. நம்மப் பய தமிலு. லாங்குவேஜு செட் ஆவல”

“இங்கிலீசுல பேசுறான்.”

“ஹி..ஹி.ஹி..ஹீ..”

“ம்..ம்.. இவனுக்குதான் ஏ பி சி டியத் தவிர இங்கிலீசு தெரியாதே. ஏதோ தஸ்ஸு புஸ்ஸுன்னு பீட்டர் வுடறான்”

“ஒரு வெளம்பரத்துல வேலைக்காரி இங்கிலீஸ் பாடி தர பெருக்குமே. அங்க போய் கத்துக்கறான்”

யாரிடமோ ஃபோனிலும் பக்கத்திலும் பார்த்து பார்த்து ஆணழகன் ஒருவன் பஸ் முழுவதும் கேட்கும்படி பொதுக்கூட்டமாகப் பேசிக்கொண்டிருந்தான்.

இப்போது ஒரு சிக்னல். நெட்டித்தள்ளும் கூட்டமில்லை. சாயந்திரமாக இருந்தாலும் காலையில் இருந்து சூடாக வறுத்தெடுத்ததால் வடாம் பொறித்த இரும்புச்சட்டி போல தரையிலிருந்து உஷ்ணம் தகித்தது. டிரைவரை அது இம்சித்திருக்கக்கூடும். விஷயம் என்னவென்றால் முன்னால் ஒரு வெள்ளைக் கார் நேரே போவதற்கு நின்றிருந்தது. இடதுபுறம் ஒரு ஆட்டோ நுழைய இடம் இருந்தது. அதில் அந்த ஆஜானுபாகுவான பஸ்ஸை அனாயாசமாக நுழைக்க முற்பட்டார். ஏனென்றால் நாங்கள் இடதில் திரும்பவேண்டும். அது ”இலவச” இடது கூடக் கிடையாது.

மூன்றாவது பாராவில் ஹாரனைத் தடவிக்கொண்டு உட்கார்ந்திருந்தார் என்று படித்திருப்பீர்கள். இப்போது அதை வாசிக்க ஆரம்பித்தார். இளையராவிடம் உதவியாளராக பணிபுரிந்தது போன்ற ஒரு திறமை அவரிடம் இருந்தது. சுதிலயம் மாறாமல் விட்டுவிட்டு வாசித்தார். காரின் கண்ணாடிகள் உறுதியாக மூடியிருந்தது. பின்னால் இருந்து பார்த்ததில் இவரது சங்கீத ஹாரனை மிஞ்சும் வகையில் காரினுள் ரஹ்மான் சிவமணியின் உதவியோடு அடித்து நொறுக்கி தவிடுபொடியாக்கிக்கொண்டிருந்தார். காரின் பின்புறக் குலுங்களில் ரஹ்மான் பீட் தெரிந்தது. பொறுமையிழந்த ஒரு பெரியவர் பஸ்ஸினுள் இருந்து குரல் கொடுத்தார் “லேசா இடிப்பா”. சிக்னல் இன்னமும் ரெட் காட்டிக்கொண்டிருந்தது.

போருக்குப் புறப்படும் மனோகராவிற்கு கலைஞரின் வசனம் தட்டி எழுப்பி ஒரு கிளர்ச்சியைத் தருவது போல பஸ் டிரைவர் இப்போது அந்த பெரியவரால் முடுக்கிவிடப்பட்டார். கிளைமாக்ஸ் காட்சியில் கொலையாளியை பிடிக்கும்போது பின்னணியில் ஒலிக்கும் ரத்தத்தைப் பாய வைக்கும் விரைவு இசை போல ஹார்ன் அடித்தார். வெர்னா அசைவதாக தெரியவில்லை. இங்கே பஸ்ஸில் அந்தக் கிழவர் வெகுண்டார். எழுந்து ட்ரைவர் சீட்டருகே சென்று சென்னைச் செந்தமிழில் வைதார். எங்கள் பஸ் ட்ரைவர் மணிக்கட்டு முறியும் வரை ஹார்ன் ஒலி எழுப்பினார். உஹூம். பலனில்லை.

சில விநாடிகளில் பச்சை விழுந்தது. தனது பீ.பியை ஏற்றிக்கொள்ளாதவர்கள் பொறுமையாக கோடு தாண்டினார்கள். இப்போது பின் சீட்டு இளைஞர்கள் காதலிப்பதற்கு பெண்களை வகைப்படுத்தி தேடிக்கொண்டிருந்தார்கள். பி.ஏ.கிருஷ்ணனின் “அக்கிரகாரத்தில் பெரியார்” என் பையில் இருந்தது. கொஞ்ச நேரம் திருப்பினேன். இடையிடையே வந்த நிறுத்தங்களில் பயணிகளை ஓடவிடமால் காலருகே கொண்டு போய் வண்டியை நிறுத்தி ஏற்றிக்கொண்டார் ட்ரைவர் உருவில் இருந்த அந்த ஹார்ன் இசைக் கலைஞர். எப்போதெல்லாம் தோன்றுகிறதோ அப்போதெல்லாம் அனிச்சை செயலாக ஒரு முறை ஹார்னை தட்டுகிறார். சில முறை லேசாக. பலமுறை பலமாக. தூக்கத்தில் எப்படி என்று தெரியவில்லை!

இரு முதல்வர்களின் பெயர்களை தாங்கிய பிரம்மாண்ட கல்வெட்டுகளைக் கொண்ட கோயம்பேடு என்கிற பன்னாட்டு பஸ் நிலையத்தில் அந்த இளைஞர் கோஷ்டி ”கெக்கெக்கே” என்றபடி படியிறங்கியது. பஸ் உள்ளே இருக்கைகள் தாராளமாக இருந்தும் ஈருடல் ஓருடலாக தள்ளுமுள்ளுவில் திபுதிபுவென ஏறினார்கள். நமது ஹார்ன் கலைஞர் பத்து பேர் ஏறுவதற்குள் இருபது முறை ஸ்ருதி பிசகாமல் சப்த சங்கீதம் வாசித்தார். என்னோடு புத்தகத்தில் பேசிக்கொண்டிருந்த பி.ஏ.கிருஷ்ணன் எழுந்து வந்துவிடுவாரோ என்கிற அச்சம் எழுந்தது.

சிறிதுநேரம் லேசாகக் கண்ணயர்ந்த நான் எழுந்தது இன்னொரு புதுவிதமான ஹார்ன் வாத்தியக் கலைஞரால். பின்னால் பாடி திறந்த ஒரு டாட்டா 407ல் குதிர் குதிராய் ஸ்பீக்கர்கள் அடுக்கி அதன் மேல் சிலர் பள்ளிகொண்ட பெருமாள் போல ஒரு கையை கொடுத்து தலையை தூக்கிப் படுத்துக்கொண்டு பயணப்பட்டிருந்தார்கள். 407 நெற்றியில் பாலு ஸ்ருதி என்று ஸ்டிக்கரால் எழுதியிருந்தது. அந்த ட்ரைவர் கொஞ்சம் முரட்டு வாத்தியமாக வாசித்ததில் எனக்கு முழிப்பு வந்தது. தனது வாகனத்தின் அகலத்திற்கு உள்ளே முன்னால் ஒரு ஈ எறும்பு நுழைந்தாலும் ஹார்னால் அலறினார். வெறித்த பார்வையும் முறுக்கிய மீசையும் அலறும் ஹார்னும் அந்தப் பிரதேசத்தையே காதைக் கழற்றி கீழே வைக்க நிர்பந்தப்படுத்தியது. திருமங்கலம் அருகே ஏறி வண்டி நான்கடி நகர்வதற்கும் குறட்டை விட்ட என் பக்கத்து சீட்டு ஆளைக் கூட எழுப்பிட்டது அந்த ஹார்ன் ஒலி. எழுந்து உதடோரத்தில் கோடவாய் வழிந்ததைத் துடைத்துக்கொண்டு அந்த 407வை சுட்டெரிக்கும் பார்வையால் பொசுக்கிவிடுவது போலப் பார்த்தார்.

நம்முடைய மெல்லிசை வாசிக்கும் பஸ் ஓட்டுனருக்கும் வல்லிசையில் விளையாடும் 407க்கும் இப்போது நடுரோட்டில் சங்கீதப் போட்டி ஆரம்பித்தது. ஒருவருக்கொருவர் கிராஸ் செய்வதும் பஸ் இரண்டு “பாம்..பாம்” அடித்தால் 407 நான்கு முறை நிறுத்தாமல் அடித்தது. நடுரோட்டில் ஹார்ன் இசைவெள்ளம் பிரவாகமாக வழிந்தோடியது. இவ்வளவு முறை சலிக்காமல் ஹார்ன் அழுத்தும் ஓட்டுனருக்கு இருதய நோய் நிச்சயம். ஒருசில சமயங்களில் 407 ட்ரைவர் எழுந்து ஹார்ன் மேல் நின்றுவிட்டது போல அந்த வண்டி பிளிறியது. பஸ்ஸில் இருந்த சொற்ப பயணிகளும் செவிடாக வேண்டும் என்று சங்கல்பம் செய்து கொண்டு நமது பஸ் ட்ரைவர் அடித்தார்.

கிண்டி எஸ்டேட் அருகில் இந்த சூப்பர் ஹார்னர் போட்டி நிறைவிற்கு வந்தது. எஸ்டேட் பக்கம் வண்டியை ஒடித்து இந்த போட்டியை முடித்துக்கொண்டதாக பஸ் ட்ரைவர் அறிவித்தார். கழுத்து ஒடியும் வரை திரும்பிப் பார்த்துக்கொண்டே சென்றார் பாலு ஸ்ருதி டாடா 407. பிப்...பீம்..பிம்.

கிண்டி தொழிற்ப்பேட்டையில் வரிசையாக துரித உணவுக் கடைகள். பிளைன் பிரியாணி (குஸ்கா) என்று எழுதி போர்டில் தொங்கிய நித்யஸ்ரீ செட்டிநாடு ஹோட்டல் அருகே வண்டியை நிறுத்தினார். பயணிகளை துரிதகதியில் அழைத்து ஏற்றுவதற்காக இவ்வளவு நேரம் கையொடிய ஹார்ன் வாசித்தும் கவலையில்லாமல் மீண்டும் ஒலியெழுப்பினார். இப்போது இந்த சங்கீதம் என் காதுகளுக்குப் பழக ஆரம்பித்துவிட்டது. நிமிடத்திற்கு ஒருமுறை இதைக் கேட்காவிட்டால் எதையோ இழந்தது போல மனசு துடிக்க ஆரம்பித்தது.

ஒரு கொத்துப் பயணிகளை ஏற்றிக்கொண்டு புறப்பட்டோம். இம்முறை பெண்கள் பக்கம் ரொம்பி வழிந்தது. பேச்சு சத்தம் அதிகமானது. ஏறியவர்களுக்கு பேசுவதற்கு வீட்டிலும் நாட்டிலும் நடக்கும் அநியாயங்கள் தீனி போட்டன.

“ஹக்காங்.. இவன் மண்ணுமோகன் மேரியே இருக்கான். அவ தான் சோனியா. இளுத்த இளுப்புக்கு ஆடுறான் இவன்” தேசிய அரசியல் களத்திலிருந்து உதாரணங்களைப் பொறுக்கி வீட்டு அரசியலுக்கு ஒப்புமைப்படுத்தி சொல்லிக்கொண்டிருந்தாள் ஒரு கிழவி. ஒரு சந்தர்ப்பத்தில் அந்த கிழவியின் வாசகங்களுக்கு உயிரூட்டும் பின்னணி இசையாக ஹார்ன் அடித்தார் நமது பஸ் டிரைவர் போர்வையில் வாழும் இசைக்கலைஞர். மெய் சிலிர்த்தது!

பஸ் கொஞ்சம் கொஞ்சமாக பயணிகளை ஸ்டாப்தோறும் உதிர்த்துக்கொண்டே வந்தது. கிழவியும் அவளுடன் வந்த குமரியும் இறங்கிக்கொண்டார்கள். ஹார்ன் டிரைவர், நான், நடத்துனர் மட்டுமே பஸ்ஸில் இருந்தோம். இன்னும் இரண்டு ஸ்டாப் மிச்சம் இருந்தது. நான் ட்ரைவரைக் கூர்ந்து கவனிக்கலானேன். கியர் மாற்றுவது கொஞ்சம் சிரமமாக இருக்கிறது. அச்சந்தர்ப்பத்தில் அவருக்கு ஒரு வெறி வருகிறது. அதைப் போக்கிக் கொள்வதற்கு ஒவ்வொரு முறையும் ஹார்னைப் பதம் பார்க்கிறார் என்று நினைத்துக்கொண்டேன்.

இவ்வளவு நாட்கள் கண்ணாடி ஏற்றிய காரில் பயணித்தபோது இவ்வளவு விதமான ஹார்ன் சப்தங்களை என் காது கேட்டறியவில்லை. மொஸார்ட்டின் இசைக்கு ஒப்பாக இவ்வளவு கலைஞர்கள் நம் தேசத்தில் ட்ரைவர் ரூபத்தில் நடமாடுவது இந்த இசை ஏழைக்குத் தெரியவில்லை. எனது நிறுத்தத்தில் இறங்கிக்கொண்டேன். வண்டி எடுக்கும் போது மீண்டும் இருமுறை ஒலித்தார். ஆஹா.. அபாரம்! அபாரம்!! என்னவொரு ஸ்ருதி! என்ன ஒரு லயம்!! நடந்து வீடு வந்து சேரும் வரை காதுகளில் இசைத்துக்கொண்டே இருந்தது.

வீட்டினுள் நுழைந்தவுடன் பெயர் தெரியாத ஒரு சேனலில் நாதஸ்வரக் கலைஞர் ஒருவர் முழுத் தெம்புடன் பீப்பீ வாசித்துக்கொண்டிருந்தார். என் செவிக்கு ஹாரனீயமாய் அது எட்டியது. கொஞ்சம் உன்னித்துப் பார்த்தால் அவருக்கு இளந்தாடியும் இருக்கிறது. கச்சேரி களைகட்ட ஆரம்பித்தது.

பின் குறிப்பு: ஹார்மோனியம் போல ஒரு இசைக்கருவியாக ஹார்னை உபயோகித்தால் அதற்கு ஹாரனீயம் என்று பெயர்.
-

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails